Thursday, July 16, 2009

உயிர்மை ஜூலை'2009 இதழில் வெளியான 3 கவிதைகள்

பால் சுரக்கும் எனது மார்பு
-------------------------------------
வானத்து பறவைகள்
பசியில் கத்துகின்றன .
எனது மார்பில் பால் சுரக்கிறது .
கடல் நீர் மீன்கள்
பசியில் வாய் பிளகின்றன.
என் மார்பில் பால் சுரக்கிறது .
கானக விலங்குகள்
பசியில் அலறுகின்றன .
என் மார்பில் பால் சுரக்கிறது .

துயரம் ...
அவைகளின் வாய்க்குபொருந்தாத
மார்பெனக்கு.

கவலையில்லை
மூன்றாய் அறுத்தெரிந்து
வானத்திற்கும் ,
கடலுக்கும் ,
கானகதிற்க்கும்...
இனி பசியில்லை
எங்கும் ,எதற்கும்

நாய்க்குட்டி பொம்மை
--------------------------------
அலமாரியில்
அடுக்கி வைக்கப்பட்ட இடத்திலிருந்து
தன் திசையிலிருந்து மாற்றி மாற்றி
அமர்ந்து கொள்கிறது
அந்த நாய்க்குட்டி பொம்மை .
உணவு மேசையை நோக்கி
உணவு மேசையின் மேலிருக்கும்
வெண்ணையில் தோய்த்துயெடுக்கப்பட்ட
ரொட்டி துண்டுகளை நோக்கி
மாற்றி மாற்றி அமர்ந்து கொள்கிறது
அந்த நாய்க்குட்டி பொம்மை

அந்த நாய்க்குட்டி பொம்மையுடன்
விளையாடிகொண்டே இருந்துவிட்டு
அப்படியே தூங்கி விட்டது குழந்தை .
காலையில் எழுந்து பார்த்தேன் .
குழந்தையின் முதுகிற்கு அடியில்
நசுங்கி கிடந்தது பொம்மை .
பாவம் இரவெல்லாம் எப்படி அழுததோ .

சிறகுகள்
-------------
மனதின் சரிவுகளில்
எண்ணிலடங்கா பறவைகள்
நியாபகங்களில் வளர்ந்து நிற்கிறது
பருத்த ஆலமரமொன்று
கண்களில் உப்பு நீர் சுனை .
மனதின் புற வெளியில்
எல்லையில்லா வானம்
எப்போதாவது தூரத்தில்
நீ தெரியும் வேளை
சரிவுகளிலிருந்து வெளிப்பட்டு
பறக்க துவங்குகின்றன .
ஆயிரமாயிரம் பறவைகள்
வானம் முழுக்க சிறகுகள் .

2 comments:

விநாயக முருகன் said...

உயிர்மையில் நாய்க்குட்டி பொம்மை ரசித்தேன்.

தங்கள் தளத்திற்கு இ‌து எனது முத‌ல் வருகை.

இன்பா சுப்ரமணியன் said...

அன்பு விநாயகர், நா பதினாலு வருடம் தொடர்ந்து நிஜ நாய் பிள்ளைகளோடு நசுங்காமல் படுத்து இருந்தேன். இன்றோ அனைவரையும் இழந்து விட்டேன். என்ன செய்ய? வேறு ஒருவனை வாங்கி வளர்க்கும் தைரியமில்லை. நா அனாதையாகலாம். அவர்களை அனாதையாக விட முடியாது.. ஆலையில்லா ஊருக்கு இலுப்பை பூ சர்க்கரை போல, என் பிள்ளைகள் இல்லா இடத்தில நாய் பொம்மை... நன்றி நண்பா. தொடர்ந்து தொடர்பில் இருங்கள். உங்கள் அன்புக்கு நன்றி..
நேசமுடன்,
இன்பா.