Saturday, August 22, 2009

நட்பும் .நட்பு நிமிர்த்தமும்

தோழி .தமிழச்சி தங்க பாண்டியனுடன்.

தோழி .கனிமொழியுடன்



உயர்திரு. க .அன்பழகன் விருது வழங்குகிறார்.



தோழி.லதா ரஜினிக்காந்த்துடன்



Monday, July 27, 2009

பூமி தின்னி


பூமி தின்னி

அவன் பூமி தின்னி -
வாழ்விடங்களை விட்டு
பூர்வ குடிகளை
புலம் பெயர்ப்பவன்

அவன் நர மாமிசி-
குடிகளை தீயிலிட்டு
சிதைத்து
சிங்கங்களிடம் தின்ன கொடுப்பவன்

அவன் ஸ்த்ரி வேட்டையன் -
வயது வேறுபாடின்றி பெண்களை
வன் புணர்வில்
யோனி சிதைத்தவன் -

தேசம் முழுவதையும்
இடுகாடாக்கி தன் சகாக்களோடு
மையத்தில் அமர்ந்து
பிணவாடை நுகர் கிளர்ச்சி அடைபவன்

கூரால் சூல் கொண்டவளை பிளந்து
குழந்தை கண்டு
குழந்தையின்
வயிறு பிளந்து
சுடு குருதி குடித்தலைபவன்
அப்ப்பூமி தின்னியின்
உடலெங்கும் பரவி,
கிளைதுக்கிடகிறது நச்சுக்கொடி.
பூமியெங்கும் நிரவிக்கிடக்கிறான்
சுடு குருதி குடித்த அந்நர மாமிசி .

Wednesday, July 22, 2009

உயிரோசை -ஜூன் இதழில் வெளியான கவிதை

வசந்த காலம்
உறவினர்கள் வந்து
தங்கிவிட்டுப்போன வீட்டை
கழுவிச் சுத்தப்படுத்துவது போல
குழந்தைகள் சிதறடித்த
விளையாட்டுப் பொருட்களை
அலமாரியில் அடுக்கி வைப்பது போல
வசந்த காலம்
முடிந்த நாளின் அதிகாலையில்
பூக்கள் மூடிக் கிடக்கும்
நகரத்தை
சுத்தம் செய்கிறார்கள்
துப்புரவுப் பணியாளர்கள் .

Thursday, July 16, 2009

மணல்வீடு இதழ் 1(மே - ஜூன்-2008) இல் வெளியான கவிதைகள்


வெள்ளை காகிதம்
---------------------------

மேசை மேலிருக்கும்

எதுவும் எழுதபடாத

வெள்ளை காகிதம் -அதில்

ஒரே சமயத்தில் எல்லா திசைகளிலும்

பறந்து செல்லும்

வெள்ளை கொக்குகளும்

பறவைகள் ஏதுமற்ற

வெற்று வானமும் .


காட்டுத்தீ
--------------
கொளுந்துவிட்டு எரியும்

காட்டுத் தீயினுள்ளே

ஊதாநிற சமுத்திரமொன்றும்

மஞ்சள்நிற நடுமதியமொன்றும்

பருமனான ஆரஞ்சு பழமொன்றும்

உற்றுப்பார் ....

உள்ளே தெரியும் .


வெவ்வேறு மரம்
------------------------

மழை காலத்திற்கு முந்தைய மரம்

மழை காலத்திற்கு பிந்தைய மரம்

கோடை காலத்திற்கு முந்தைய மரம்

கோடை காலத்திற்கு பிந்தைய மரம்

எல்லாம் வேறுவேறு

அதன் வேர்கள் மட்டுமே ஓன்று .


வசந்த காலம்
---------------------

ஆறு மாதத்திற்கு முன்

வசந்த காலத்தில்

நான் வேறொரு ஊரில்

வேறொரு வீட்டில் வசித்தேன்

மஞ்சளும் ,சிகப்புமாய்

பூக்கள் மூடிக் கிடக்கும்

சாலையின்

இறுதியில் முடியும்

வீடாய் இருந்தது அது .

இப்போது

கோடை காலத்தில்

நிறம் மங்கிய இலைகளும்

இலைகளே இல்லாத மரங்களும்

கொண்ட சாலையின்

இறுதியில் முடியும்

( இந்த முறையும் இறுதியாக தானிருந்தது)

வீடாயிருந்தது.

இந்த இந்தஇரண்டு வீடுகளும்

ஓன்று தான் என்கிறார்கள்

நான் நம்பவில்லை .

புது எழுத்து இதழ் 17 -( ஜூலை'2009 ) இல் வெளியான கவிதைகள்


பூவாத்தாவரம்

--------------------

வசந்தகாலம்

மண்டப சாலையில்

அதிகமாய் உதிர்ந்துக் கிடக்கும்

மஞ்சள் நிறப்பூக்களை

அள்ளிக் கொண்டுப் போய் கொட்டுகிறது

காற்று .

ஒரு பூவாத்தாவரத்தின் காலடியில்


சிற்றாறு

------------

பாலைவனத்தின் மணல் வெளியெங்கிலும்

ஓடுகிறது சிற்றாறு

தரையில் படாமல் ஓடுகிறது

அதன் நீர்
நிலவும் மிதக்காது

சூரிய ஒளியும் பாவாத

அச்சிற்றாறு

ஒட்டகங்களின்

கூனல் முதுகுகளில்.


கண்ணாடி றெக்கைகள்

-------------------------------

கிழிபட்டு

வேலியோரத்தில்

இறந்து கிடக்கும் தும்பியை

புரட்டிப்புரட்டிப் பார்க்கிறது

காற்று .

அதை எழுப்பும் விதமாய்

உயிர்மை ஜூலை'2009 இதழில் வெளியான 3 கவிதைகள்

பால் சுரக்கும் எனது மார்பு
-------------------------------------
வானத்து பறவைகள்
பசியில் கத்துகின்றன .
எனது மார்பில் பால் சுரக்கிறது .
கடல் நீர் மீன்கள்
பசியில் வாய் பிளகின்றன.
என் மார்பில் பால் சுரக்கிறது .
கானக விலங்குகள்
பசியில் அலறுகின்றன .
என் மார்பில் பால் சுரக்கிறது .

துயரம் ...
அவைகளின் வாய்க்குபொருந்தாத
மார்பெனக்கு.

கவலையில்லை
மூன்றாய் அறுத்தெரிந்து
வானத்திற்கும் ,
கடலுக்கும் ,
கானகதிற்க்கும்...
இனி பசியில்லை
எங்கும் ,எதற்கும்

நாய்க்குட்டி பொம்மை
--------------------------------
அலமாரியில்
அடுக்கி வைக்கப்பட்ட இடத்திலிருந்து
தன் திசையிலிருந்து மாற்றி மாற்றி
அமர்ந்து கொள்கிறது
அந்த நாய்க்குட்டி பொம்மை .
உணவு மேசையை நோக்கி
உணவு மேசையின் மேலிருக்கும்
வெண்ணையில் தோய்த்துயெடுக்கப்பட்ட
ரொட்டி துண்டுகளை நோக்கி
மாற்றி மாற்றி அமர்ந்து கொள்கிறது
அந்த நாய்க்குட்டி பொம்மை

அந்த நாய்க்குட்டி பொம்மையுடன்
விளையாடிகொண்டே இருந்துவிட்டு
அப்படியே தூங்கி விட்டது குழந்தை .
காலையில் எழுந்து பார்த்தேன் .
குழந்தையின் முதுகிற்கு அடியில்
நசுங்கி கிடந்தது பொம்மை .
பாவம் இரவெல்லாம் எப்படி அழுததோ .

சிறகுகள்
-------------
மனதின் சரிவுகளில்
எண்ணிலடங்கா பறவைகள்
நியாபகங்களில் வளர்ந்து நிற்கிறது
பருத்த ஆலமரமொன்று
கண்களில் உப்பு நீர் சுனை .
மனதின் புற வெளியில்
எல்லையில்லா வானம்
எப்போதாவது தூரத்தில்
நீ தெரியும் வேளை
சரிவுகளிலிருந்து வெளிப்பட்டு
பறக்க துவங்குகின்றன .
ஆயிரமாயிரம் பறவைகள்
வானம் முழுக்க சிறகுகள் .

Sunday, June 21, 2009

வால்பாறை இலக்கியக் கூட்டம்-தமிழ்நதி

  1. கவிஞர்கள், இலக்கிய ஆர்வலர்கள், பார்வையாளர்கள் என்று ஏறத்தாழ நாற்பதுபேரை உள்ளடக்கியபடி, வால்பாறையை நோக்கி அந்த மலைப்பாதையில் விரைந்துகொண்டிருந்தது பேருந்து. அபாயமும் அழகும் எப்போதும் சமாந்தரத்தில் பயணிப்பனபோல. கொண்டையூசி வளைவுகளில் திரும்பும்போதும், ஆழத்தில் அபாய அழைப்போடு கிடந்த பள்ளத்தாக்குகளை நம்மை மீறி எழும் கற்பனைகளுடன் பார்க்கும்போதும் உடல் சிறிது கூசியடங்கியது. எப்போதாவது தென்படும் மலையருவிகள், மிக நேர்த்தியான வரிசையிலமைந்த தேயிலைச்செடிகளால் பசுமைப்போர்வை போர்த்தப்பட்ட மலைகள், வெள்ளையும் மெலிதான சாம்பலும் கலந்து அள்ளிச் சாப்பிடத் தூண்டியபடி மலைகளில் செல்லங்கொட்டிக் கிடக்கும் மேகப்பஞ்சுகள்... பொள்ளாச்சியிலிருந்து இரண்டே மணிப் பயண தூரத்தில் இப்படியொரு அழகு கொட்டிக்கிடப்பதை நம்பமுடியாமல்தானிருந்தது. அ.மார்க்ஸ், மலர்விழி, அமுதா, கவின்மலர், நீலகண்டன், இசை, நரன், இளங்கோ கிருஷ்ணன், இளஞ்சேரல், மதிவண்ணன், ஜெயந்தி, சுகிர்தராணி, இன்பா சுப்பிரமணியம், லீனா மணிமேகலை, சல்மா பிரியதர்சன், விஷ்ணுபுரம் சரவணன், யாழன் ஆதி, கம்பீரன், அய்யப்ப மாதவன், மஞ்சு, வித்யாசாகர், சுகன்(பிரான்ஸ்), சஃபி, எஸ்.தேன்மொழி, எழில்செல்வன், முஜிபுர் ரகுமான், எச்.ஜி.ரசூல், ராஜன் குறை, இளங்கவி அருள், அசதா, க.மோகனரங்கன், சுரேஷ்வரன், சிறிதர், சாஹிப் ஹிரண், நடா.சிவகுமார், கரிகாலன், காந்தி (ஓவியர்), மணிவண்ணன் (ஓவியர்), தமிழ்நதி கலந்துகொண்டவர்களில் நினைவில் நின்ற பெயர்கள் இவ்வளவுதான். பயணங்கள் நெடுகிலும் ஏதாவது ஞாபகங்கள் கூடக் கூட ஓடிவரும். ‘மழையைத் தேடித் தொடரும் பயணம்’என்ற வாக்கியம் அன்று அடிக்கடி தோன்றி மறைந்தது. சென்னையிலிருந்து கிளம்பியபோது ‘தேனி சில்லென்றிருக்கும். சிலசமயம் மழைகூடப் பெய்யலாம்’என்றார்கள். பெய்யவில்லை. ‘பொள்ளாச்சி அற்புதமாக இருக்கும்’என்றார்கள். நான் தங்கிய விடுதி நகரமத்தியில் இருந்தது. நகரங்களில் அற்புதங்களைக் காண்பதற்கில்லை. வால்பாறையை நோக்கி கொழுத்தும் வெய்யிலில் பயணித்துக்கொண்டிருந்தபோது மழைக்காகவும் குறைந்தபட்சம் குளிருக்காகவும் உள்மனசு ஏங்கிக்கொண்டிருந்தது. நாற்பது கொண்டையூசி வளைவுகளில் இருபதுக்குமேல் கடந்தபிறகு குளிர் மெல்லென முகத்தைத் தடவியது. நெடுநாள் பிரிந்திருந்தவனின் கண்களை எதேச்சையாக எதிர்கொள்ள நேர்ந்த பரவசத்தைக் குளிர் தந்தது. நாங்கள் தங்குவதற்கென ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்தில், தோழிகள் சிலருடன் ஒரு அறைக்குள் இடம்பிடித்துக்கொண்டேன். தமிழ்க் கவிஞர்கள் இயக்கத்தைச் சேர்ந்த கவிஞர்களான லீனா மணிமேகலை, சல்மா பிரியதர்சன், சுகிர்தராணி, இன்பா சுப்பிரமணியம் ஆகியோரால் அந்தக் கவிதை விமர்சன நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. ஜூன் 13ஆம் திகதி எழுத்தாளர் கமலாதாஸ் நினைவரங்கமாகவும், ஜூன் 14ஆம் திகதி கவிஞர் ராஜமார்த்தாண்டன் நினைவரங்கமாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. வரவேற்புரை நிகழ்த்திய லீனா மணிமேகலை பேசும்போது, தொடர்ந்து நினைவரங்கமாகவே நடத்தவேண்டியிருப்பது துரதிர்ஷ்டவசமானது என்று குறிப்பிட்டார். கிருத்திகா, சுகந்தி சுப்பிரமணியம், அப்பாஸ், சி.மணி, கமலாதாஸ், ராஜமார்த்தாண்டன் எனத் தொடர்வது வருந்தத்தக்கது என்றார். லீனாவைத் தொடர்ந்து அ.மார்க்ஸ் மற்றும் கரிகாலன் உரையாற்றினார்கள். எந்தவித ஈகோவும் இல்லாமல் கூடிப் பேசுவதற்கு இவ்வகையான கூட்டங்கள் உதவுவதாக கரிகாலன் சொன்னார். எழுத்து, கசடதபற, மீட்சி என அவ்வக்காலங்களில் கவிதைக்கு உறுதுணையாக இருந்த பல சஞ்சிகை மற்றும் எழுத்தியக்கங்களைக் குறித்து அ.மார்க்ஸ் பேசினார். புலப்பெயர்வு என்பது வெளிநாடுகளில் மட்டுமல்லாது, இந்தியாவிலும் நிகழ்ந்துகொண்டுதானிருக்கிறது என்று கூறிய அவர் அவற்றுக்கு உதாரணமாக, நக்சல்பாரிகளால் ஏற்படும் இடப்பெயர்வு, ஆதிவாசிகள் வாழ்விடங்களிலிருந்து பெயர்க்கப்படுவது, நகரை அழகுபடுத்துகிறோம் என்ற அரச முன்னெடுப்புகளால் பலவந்தமாக இடம்பெயர்க்கப்படுவோர் ஆகியவற்றை முன்வைத்துப் பேசினார். இந்த இயந்திரமயமான உலகில் நம்மைப் புதுக்கிக்கொள்ள உதவும் காரணங்களில் ஒன்றாக கவிதை தொழிற்படுகிறது என்றார். கமலாதாஸ் அரங்கினைத் தொடக்கிவைத்துப் பேசவேண்டிய கவிஞர் மாலதி மைத்ரி வரமுடியாமற் போனமையால், என்னை ஒரு கட்டுரை எழுதி வந்து வாசிக்கமுடியுமா என்று கேட்டிருந்தார்கள். எனக்கு வழங்கப்பட்ட ஒரேயொரு நாள் அவகாசத்தில் ஒருவழியாக அதை எழுதி ஒப்பேற்றி முடித்தேன். கட்டுரையில், கமலாதாஸ் இறந்தபிற்பாடு அவரைப் பற்றி ஜெயமோகன் எழுதிய வாசகங்களை மேற்கோள் காட்டியிருந்தேன். ஜெயமோகனின் திருவாய்மொழிதல் குறித்து பலருக்கும் பரவலான அதிருப்தியும் கசப்பும் இருந்ததைக் கூட்டத்தில் காணமுடிந்தது. “ஜெயமோகனது இணையத்தளங்களில் இடப்படும் கடிதங்களில் பல அவரே அவருக்கு எழுதிக்கொண்டவை என்பதை நீங்கள் அறியமாட்டீர்களா?”என்றொரு நண்பர் கேட்டார். இத்தகைய சித்துவிளையாட்டுக்களை, சுயசொறிதல்களை நான் அறியாதிருந்ததை அவரிடம் ஒத்துக்கொண்டேன். ரமேஷ் பிரேதனின் ‘சாராயக்கடை’கவிதைத் தொகுப்பைப் பற்றி இளங்கோ கிருஷ்ணன் கட்டுரை வாசித்தார். பித்து, போதை, கவித்துவம் இம்மூன்றும் கலந்த கவிதைகளே ரமேஷ் பிரேதனுடையவை என்றார் அவர். தோற்கடிக்கப்பட்ட மனிதனின் வன்மம், துரோகத்தினால் நொய்மையடைந்த ஒரு மனம் ஆகியவற்றை அவற்றில் காணலாம் என்று மேலும் சொன்னார். ‘சாராயக்கடை’ எழுதப்பட்ட பின்னணி பற்றி இளங்கவி அருள் பேசுகையில், ரமேஷ் பிரேதன் தற்கொலைக்கு நெருக்கமான ஒரு மனோநிலையிலும் பித்து நிலையிலும் இருந்து அக்கவிதைகளை எழுதியதாகக் குறிப்பிட்டார். அடுத்து, இசையின் ‘உறுமீன்களற்ற நதி’கவிதைத் தொகுப்பை கரிகாலன் விமர்சித்துப் பேசினார். அவருடைய வார்த்தைகளில் சொன்னால் அது ‘விமர்சனமாக அல்லாது கொண்டாடுவதாகவே’அமைந்திருந்தது. ஒரு மகாகவிக்குரிய சாத்தியக்கூறுகளைத் தான் இசையின் கவிதைகளில் காண்பதாக கரிகாலன் சொன்னபோது, கைதட்டல்களும் சிரிப்பொலிகளும் எழுந்தன. (அப்போதிருந்து எங்களது நண்பர் வட்டத்தில் இசையை ‘மகாகவி’என்றே அழைக்கவாரம்பித்திருக்கிறோம்.) மிக எளிமையான சொற்களைக்கொண்டு கவிதை புனைவதோடல்லாமல், புதிய வடிவங்களையும் அவர் பரீட்சித்துப் பார்ப்பதாகவும், முன்னதன் சாயல் பின்னதில் இல்லாமலிருக்க முடிந்தளவு முயற்சிப்பதாகவும் கரிகாலன் மேலும் வியந்தார். ஆதர்ச உலகிற்கும் நடைமுறை உலகிற்கும் இடையிலான கவிஞனின் தத்தளிப்பை இசையின் கவிதைகளில் காணமுடிவதாகவும் கூறினார். அய்யப்ப மாதவனின் ‘நிசி அகவல்’தொகுப்பைக் குறித்து அசதா கட்டுரை வாசித்தார். அந்தத் தொகுப்பை ஒரு இரயில் பயணத்தின்போது வாசித்ததாகவும், மனதில் பெரியதொரு பாதிப்பை நிகழ்த்தக்கூடிய தொகுப்பாக நிசி அகவலை இனங்கண்டதாகவும் அவர் சொன்னார். ஆழ்மனக் கிளர்ச்சியை உண்டுபண்ணத்தக்க அந்தக் கவிதைகளின் சிறப்பம்சமாக, தன்முனைப்பு அதாவது கவிஞனின் குறுக்கீடு இல்லாதிருந்ததைக் குறிப்பிட்டார். கவிதையே உச்சபட்ச சாத்தியங்களை நோக்கித் தன்னை நகர்த்திச் செல்லும் பாங்கினை அய்யப்ப மாதவனின் கவிதைகளில் கண்ணுற்றதாக அவர் பாராட்டினார். லீனா மணிமேகலையின் ‘உலகின் அழகிய முதல் பெண்’ கவிதைக்கான விமர்சனத்தை வழங்கவிருந்த க.பஞ்சாங்கம் அவர்கள் வரமுடியாமற் போன காரணத்தால், பஞ்சாங்கத்தின் கட்டுரையை சல்மா பிரியதர்சன் வாசித்தளித்தார். நவீன பெண் எழுத்தின் உச்சமாக லீனாவின் கவிதைகளை பஞ்சாங்கம் கொண்டாடியிருந்தார். நனவெளி மனதை நனவெளி வார்த்தைகளாலும் கவிதைப் பக்கங்களிலிருந்த குகை ஓவியங்களாலும் வெளிப்படுத்தியிருப்பதாகக் குறிப்பிட்டார். பாலினம் கடந்த எழுத்து பற்றிய லீனாவின் கனவைச் சிலாகித்திருந்தார். ‘ஒடுக்கப்பட்ட பாலியலின் மடைமாற்றமே இலக்கியம்’என்ற ஃபிராய்டின் வாக்கியத்தை ஓரிடத்தில் மேற்கோள் காட்டி, ஒடுக்குமுறையிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளும் முயற்சியாக இந்தக் கவிதைகளைப் பார்ப்பதாகவும் சொல்லியிருந்தார்.பஞ்சாங்கத்தின் விமர்சனத்தில் இடம்பெற்ற ‘காமக்களியாட்டம்’என்ற சொல்லின் விபரீத அர்த்தம் குறித்து முஜிபுர் ரகுமான் எழுப்பிய கேள்வியினையடுத்து, கூட்டம் கொஞ்ச நேரம் அதைப் பற்றிச் சலசலத்தது. “விமர்சனம் என்பது பாராட்டாக, புகழாரமாக இருத்தல் தகாது; ஆனால், இதுவரையில் வாசிக்கப்பட்ட நான்கு கட்டுரைகளிலும் அத்தன்மையினையே அவதானிக்க முடிந்தது”என்று முஜிபுர் ரகுமான் விமர்சித்தார். அவரையடுத்துப் பேசிய ராஜன் குறை, அக்கருத்துக்கு எதிர்வளமாகச் சொன்னார். அதாவது, “கோட்பாட்டு ரீதியான வாதங்களில் இருக்கக்கூடிய வரண்ட தன்மையை விடுத்து, சககவிஞரை உற்சாகப்படுத்தும் ஒரு கொண்டாட்டமாக நாம் ஏன் இதைப் பார்த்தலாகாது?” என்று கேள்வியெழுப்பினார். அ.மார்க்ஸ் குறைகளும் சுட்டிக்காட்டப்படுவதே சிறந்த விமர்சனமாக இருக்கமுடியும் என்றார். அடுத்து, யவனிகா ஸ்ரீராமின் ‘திருடர்களின் சந்தை’யை விமர்சித்துப் பேசிய மதிவண்ணன் அதீத கோபத்துடன் கூட்டத்தைப் பார்த்து சில கேள்விகளை முன்வைத்துப் பேசினார். ஊரானது சேரி என்றும் ஊர் என்றும் எவ்விதம் பிரித்துவைக்கப்பட்டிருக்கிறதோ அவ்விதமே இலக்கியமும் ஊர் இலக்கியம், சேரி இலக்கியம் என இரண்டாகப் பகுக்கப்பட்டிருப்பதாக மதிவண்ணன் சாடினார். ஏகாதிபத்தியங்களின் அடக்குமுறை அரசியலைப் பற்றித் தன் கவிதைகளில் பேசும் யவனிகா, ஏன் உள்ளுரில் நிலவும் சாதிப் பாகுபாடு குறித்தோ, மதத்தின் பெயரால் சமூகத்தில் நிகழ்த்தப்படும் அநீதிகள் குறித்தோ குரலெழுப்பவில்லை என்று கேட்டார். உடலையும் காமத்தையும் கொண்டாடுவது மட்டும்தான் பின்னவீனத்துவமா…? சமூக அடக்குமுறை, சாதி ஒடுக்குமுறை பற்றிக் கேள்வி கேட்காமல் புலன்களை மட்டும் கொண்டாடுவது எவ்விதம் தகும்? இத்தகைய காரணங்களால் அவரது கவிதையில் இருப்பதாக மற்றவர்களால் சொல்லப்படும் அரசியல்தன்மையைத் என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது என்றார். வேசிகள் போன்ற பதங்களைப் பிரயோகிப்பதன் வழியாக தான் ஒரு ஆண் என்பதை அடிக்கடி நிரூபணம் செய்கிறார் என்றும் சொன்னார். ஆத்மாநாம்தான் அரசியல் கவிதைகளின் 'அத்தாரிட்டி' என்று அ.மார்க்ஸ் சொல்வதை நான் மறுக்கிறேன் என்றார் மதிவண்ணன். அதனையடுத்து அங்கு கூடியிருந்தவர்களிடையே எதிர்ப்பும் ஆதரவுமான விவாதங்கள் களைகட்டின. மதிவண்ணனுடைய அதீத கோபத்தின் பின்னாலிருக்கக்கூடிய துயரத்தைப் பற்றி நான் சிந்தித்துக்கொண்டிருந்தேன். கரிகாலனை நோக்கி மதிவண்ணன் எழுப்பிய கேள்விக்கு அவர் பொறுமையோடும் பொறுப்போடும் பதிலளித்தமையால் பெரிய சச்சரவிலிருந்து அக்கூட்டம் தப்பித்து முன்னகரமுடிந்தது. ‘கரிகாலனின் தேர்ந்தெடுத்த கவிதைகள்’என்ற தொகுப்பைப் பற்றி க.மோகனரங்கன் கட்டுரை வாசித்தார். கிராமங்கள் நகரமயமாக்கப்படுதலின் வலியை கரிகாலன் சிறப்பாகப் பதிவுசெய்திருப்பதாக அவர் சொன்னார். அடையாளங்கள் மற்றும் அறச்சிக்கல்களைப் பேசும் கரிகாலனது கவிதைகள், கலாப்பிரியாவுக்கு அடுத்தபடியாக சித்திரத்தன்மையுடன் கூடியதாக அமைந்திருப்பதாக மோகனரங்கன் குறிப்பிட்டார். தன் எண்ணத்துக்கும் எழுத்துக்கும் இடையிலான இடைவெளிதான் ஒரு கவிஞன் எதிர்கொள்ளவேண்டிய மிகப்பெரிய சவால்… அதைக் கரிகாலன் சரியாக எதிர்கொண்டிருப்பதாகப் பாராட்டினார். எஸ்.தேன்மொழியின் ‘துறவி நண்டு’தொகுப்பினை விஷ்ணுபுரம் சரவணன் விமர்சித்துப் பேசினார். பெண்ணைக் குறித்தும் அவளது எண்ணங்கள் குறித்தும் ஆண்கள் எழுதிக்கொண்டிருந்த காலம் போய், பெண்ணே தன்னைப் பற்றி எழுத ஆரம்பித்ததானது ஆண்களைப் பதட்டம் கொள்ளவைத்ததாக சரவணன் சொன்னார். குறிப்பாக கவிதைகளில் பெண் கவிஞர்களின் ஆளுமையுடைய முன்னகர்வு ஆண்களை அச்சங்கொள்ள வைத்ததாகவும் குறிப்பிட்டார். தேன்மொழியின் கவிதைகள் உரையாடல்தன்மை பொருந்தியவையாகவும் ஒன்றுடன் மற்றொன்று சக்கரத்தன்மையுடைய தொடர்ச்சியைக் கொண்டிருப்பவையாகவும் தன்னால் அடையாளங்காண முடிந்தது என்றார். பெண்மையை எதிர்ப்பற்ற உருவமாக வைக்க தாய்மை பயன்படுகிறது என்ற இடத்தில் பெரியாரை மேற்கோள் காட்டிப் பேசினார். தாய்மை என்ற விடயத்தின் மேல் புனிதச்சாயம் பூசப்படுவதன் வழியாக பெண்களை மறைமுக அடிமைகளாக்கும் சதியினைச் சமுதாயம் செய்துகொண்டிருப்பதை தேன்மொழியின் கவிதைகளிலும் காண வாய்த்ததாக சரவணன் குறிப்பிட்டார். ஆண்மைய சிந்தனையிலிருந்து பெண்களால் முற்றிலும் விடுபட முடியாமலிருப்பதற்குரிய உதாரணங்களாக தேன்மொழியின் ‘இழிந்த இரத்தம்’, ‘கவிச்சி வாடை’போன்ற சொற்களைச் சுட்டிக்காட்டினார். ‘கடலுக்குச் சொந்தக்காரி’என்ற தலைப்பில் தொகுக்கப்பட்ட மரகதமணியின் கவிதைகளைக் குறித்து எஸ்.தேன்மொழி கட்டுரை வாசித்தார். ‘கடல் குறித்த உயில்’ என்று வழக்கமான தனது பாணியில் குறிப்பிட்ட தேன்மொழி, கடலைச் சொந்தங் கொண்டாடுதல் என்பது வாழ்க்கையை நேசித்தல் என்றார். தொலைந்துகொண்டிருக்கும் வாழ்க்கை முன் நம்மை அடையாளப்படுத்தும் குரலாக மரகதமணியின் கவிதைகளைப் பார்ப்பதாகச் சொன்னார். பெண் மொழி உடலை அரசியலாக்கிப் பேசியது தேக்கநிலைக்குச் சென்றுவிட்டதாக தேன்மொழி ஆதங்கப்பட்டார். மரகதமணியின் தொகுப்பில் மொழிச்சிக்கல் தொகுப்பெங்கும் விரவிக்கிடப்பதைக் காணமுடிந்ததாகவும், சமூகக் கரிசனை கூர்தீட்டப்படவில்லை என்றும் விமர்சித்த தேன்மொழி இனிவருங்காலத்தில் அவை கவனத்திற்கெடுக்கப்பட்டு நிரப்பப்படல் வேண்டுமென்றார். இதனிடையில் மதிவண்ணனின் விமர்சனத்திற்கெதிரான விமர்சனமொன்றை சல்மா பிரியதர்சன் முன்வைத்தார். அதாவது, யவனிகா ஸ்ரீராமின் ‘திருடர்களின் சந்தை’தொகுப்பை ஒற்றைமையப் பார்வையோடு அதாவது தலித்தியப் பார்வையோடு மதிவண்ணன் அணுகியிருக்கிறார் என்று குற்றஞ்சாட்டினார். அதற்கு மதிவண்ணன் பதிலளிக்கையில், ‘சாதி ஒழிப்பைப் பேசாத ஒரு கவிதை அரசியல் கவிதையாக எப்படி இருக்க முடியும்…? சாதியொழிப்பைப் பேசாமல் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து என்ன பயன்?’என்று கேள்வியெழுப்பினார். இலக்கியத்திலும் ஒரு சாதியச் சதி நடப்பதாக அவர் கொதித்துப்போய்ச் சொன்னார். அதையடுத்து வந்த விவாதங்களுடன் ‘கமலாதாஸ் அரங்கம்’நிறைவுபெற்றது. அன்றைய இரவைக் கொண்டாட்டத்திற்குக் கொடுத்தோம். ‘மகாகவி’இசையும் சரவணனும் நானும் நீண்ட நேரம் கதைத்துக்கொண்டிருந்தோம். ‘உங்கள் கவிதைகள் நன்றாக இருக்கின்றன. என்னுடைய கவிதைகளும். என்னுடைய கவிதைகள் நன்றாக இருக்கின்றன… உங்களுடையதும்’என்ற இசையின் பேச்சை வெகு சுவாரசியத்தோடு நானும் சரவணனும் கேட்டுக்கொண்டிருந்தோம். காலையில் என்னைப் பார்த்துச் சிரித்துவிட்டுச் சொன்னார் “திரும்பத் திரும்பப் பேசினாலும் நான் உண்மையைத்தானே பேசினேன்”என்று. நாங்கள் உறங்கச் செல்லும்போது நள்ளிரவு இரண்டரை மணி.-------நாங்கள் தங்கியிருந்த அறையினுள் தட்டுமுட்டுச் சாமான்கள் போடும் குட்டி அறையொன்று இருந்தது. கட்டிலில் இடிபட்டு உருளவிரும்பாது அந்த அறைக்குள் ஒரு துணியை விரித்து கோழிபோல கொடுகிப்போய் நாலரை மணிநேரம் தூங்கி எழுந்திருந்து வந்தால், சிலரைத் தவிர எவரும் எழுந்திருக்கவில்லை. ஆற்றுக்கு குளிக்கப் போனவர்கள், சாப்பிடப் போனவர்கள், இன்னமும் எழுந்திருக்காதவர்கள் எல்லோரும் தயாராகிக் கிளம்பும்போது மதியமாகிவிட்டது. எப்போதும் மண்டபங்களுள் மூச்சுத் திணறி நடத்தப்படும் கூட்டங்களுக்கு மாற்றாக, நதிக்கரையோரத்தில் கவிதை வாசிக்கலாம் என்ற யோசனை உவப்பாகவே இருந்தது. நாங்கள் உயர உயரப் போனோம்…. போனோம்… தேயிலைச்செடிகளின் பசுமை கண்குளிர்த்தியது. ‘இங்கயும் கவிதை படிக்க (படுத்த) வந்துவிட்டார்களா?’என்பதுபோல குரங்குகள் பார்த்தன. பேருந்து வீதியில் நிறுத்தப்பட்டு நாங்கள் நதிக்கரையைத் தேடி நடந்தபோதுதான் அது எவ்வளவு ‘அபாயகரமான கவிதை வாசிப்பு’என்பது புலனாக ஆரம்பித்தது. ஏற்ற இறக்கமான நிலப்பரப்பில் மெலிந்த ஒற்றையடிப்பாதை, கீழே பெருகிச் சுழித்து நதி பாய்ந்துகொண்டிருக்க- உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு நடக்கவேண்டியிருந்த- பலகைகள் உடைந்து ஆடும் தொங்குபாலம், பிடிமானமற்ற சறுக்குப் பாறைகள், காலை இழுத்துச் சரிக்கக் காத்திருக்கும் பாசிபடிந்த கற்கள்… இவைதாண்டி சிலுவைப்பாதை முடிந்த இடத்தில் அழகான காட்சியொன்று விரிந்தது. பாறைகளில் நீர் விழுந்து வெள்ளை நுரையோடு சலசலத்து விரைந்தோடும் ஒயிலில் மனங்கிறங்கியது. சூழநின்ற மரங்களும் காற்றில் கலந்திருந்த குளிரும் கனவில் எழும் ஓசைபோன்ற அந்தச் சத்தமும்… அந்த இடமே ஒரு கவிதையைப் போலத்தான் இருந்தது. எங்கள் கவிதைகளை வாசிப்பதனால் அச்சூழலின் தவங்கலைந்து போகுமென்றொரு எண்ணம் தோன்றி மறைந்தது. ஓடும் நீரில் காலளைந்து திளைத்தபோது காலகாலமாக அங்கேயே இருந்துவிடத் தோன்றியது. கனவின் பாதைகள் எப்போதும் கனவிலேயே முடிந்துவிடுகின்றன. 14ஆம் திகதி மதியம் 12:30 மணியளவில் வால்பாறை நதிக்கரையில் ‘ராஜமார்த்தாண்டன் அரங்கம்’களைகட்டியது. ஆரம்ப நிகழ்வாக மோகனரங்கன் கவிஞர் ராஜமார்த்தாண்டனைப் பற்றிப் பேசினார். ‘கொங்குதேர் வாழ்க்கை’தொகுப்பை ராஜமார்த்தாண்டன் கொணர்ந்தபோது எழுந்த சிக்கல்களைப் பற்றிக் குறிப்பிட்டார். கவிதையோடு கவிதைக்காக நிறைய ஆண்டுகளைச் செலவிட்டவர் எனினும், அத்தகைய பெருமைகள் எதனையும் இளையவரிடத்தில் காட்டாமல் எல்லோருடனும் சர்வசாதாரணமாக நட்புப் பாராட்டக்கூடியவர் ராஜமார்த்தாண்டன் என்று சிலாகித்தார். ராஜமார்த்தாண்டனின் ‘புதுக்கவிதை வரலாறு’என்பது எழுதவரும் புதியவர்களுக்குக் கைகாட்டக்கூடிய சிறந்த படைப்பு எனக் குறிப்பிட்ட மோகனரங்கன், அவருடைய மரணம் தமிழிலக்கியத்திற்குப் பெரும் இழப்பு என்றார். அடுத்து, ஜி.எச்.ரசூல் சல்மா பிரியதர்சனின் ‘தெய்வத்தைப் புசித்தல்’கவிதைத் தொகுப்பு குறித்த விமர்சனக் கட்டுரையை வாசித்தார். கனவின் உடைபடலைக் குறியீடாக்கிக் கவிதைகளை எழுதியவர் சல்மா எனச்சொன்னார். குடும்பம் என்ற நிறுவனத்திற்கெதிரான உரத்த குரலை அவருடைய கவிதைகளில் கேட்கமுடியும் என்றார். பிரதி முழுவதிலும் அலையும் சாவு பற்றிய குறிப்புகள், குழந்தைகளின் உலகம், எல்லாவற்றையும் நேரடியான ஒன்றாக இல்லாமல் புனைவு கலந்த ஒன்றாகப் பேசும் தன்மை ஆகியவற்றைக் குறிப்பிட்டுப் பேசினார். பெருங்கதையாடல்களைத் தகர்க்கவேண்டியதன் அவசியம் பற்றிப் பெரிதும் பேசப்படும் சூழலில் சல்மா கண்ணன்-ராதா போன்ற பிரதிமைகளுள் மீண்டும் நுழைவது விமர்சனத்திற்குட்படுத்தப்படவேண்டியது என்றார். களைப்பு தூரத்து மழையெனக் கவிவதை உணரமுடிந்தது. தொடர்ந்து பல மனஅயர்ச்சிகளுக்கு ஆளானதால் நான் மட்டும் அதை உணர்ந்தேனா…? உண்மையிலேயே மழைத்துளிகள் விழ ஆரம்பித்திருந்தன. மழையைத் தேடித் தொடர்ந்திருந்த வேட்கை தீர்வதைப் பார்த்துக்கொண்டிருந்தேன். இளங்கோ கிருஷ்ணனின் ‘காயசண்டிகை’தொகுப்பிற்கான விமர்சனத்தை எழுதிவந்திருந்த இளஞ்சேரல் அவசர வேலைநிமித்தம் ஊர்திரும்பிப்போயிருந்த காரணத்தால், அந்தக் கட்டுரையை சுரேஷ்வரன் வாசித்தார். தண்ணீரின் இரைச்சல் அவருடைய மெல்லிய குரலை மூழ்கடித்தது. அவர் வாசித்ததிலிருந்து ஒரு விடயம் மட்டுமே என்னால் கிரகிக்க முடிந்தது. இளங்கோ கிருஷ்ணனின் கவிதைகள் சமூகம் குறித்த அதிருப்தியையும், வாழ்வின் மீதான எள்ளல் கலந்த குற்றச்சாட்டையும் கொண்டிருந்தன. ‘காயசண்டிகை’எனது அடுத்த வாசிப்புப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. வாசித்துவிட்டுப் பகிர்ந்துகொள்கிறேன். அழகிய பெரியவனின் ‘உனக்கும் எனக்குமான சொல்’கவிதைத் தொகுப்புக்கான விமர்சனத்தை யாழன் ஆதி வழங்கினார். மொழிசார்ந்த மௌனமும் அதிகாரத்தின் வெற்றியாகிறது என்றார். அதிகாரத்தினின்றும் அடையாளங்களை மீட்கும் பணியைச் செய்யவேண்டிய கடப்பாடு எழுதுகோல்களுக்கு உள்ளதென்றார். அழகிய பெரியவனின் கவிதைகள் அறிவுஜீவித்தனமான சொற்களின் கட்டுமானம் அல்ல, அவரது வாழ்வனுபவங்களிலிருந்து பெற்ற எளிமையான அறிவிலிருந்து பிறந்தவை அவை என்றார். ‘நீ’, ‘உன்’ போன்ற முன்னிலை விளித்தல்களால் அழகிய பெரியவனின் கவிதைகள் நவீன மொழியிலிருந்து சற்றே பின்தங்கியவைபோல தோற்றங்காட்டுவதாகக் குறிப்பிட்டார். கவிதைகளில் கதையைச் சொல்லிச் செல்லும் தன்மையானது, அதன் வடிவங் குறித்த கேள்விகளை எழுப்புவதாக இருப்பதாக யாழன் ஆதி கூறினார். வீடு திரும்பும் அவரவர் கவலைகள் மழையென மூடிக்கொண்டிருக்குமொரு தருணத்தில், ‘மீதி அமர்வை தங்குமிடத்திற்குத் திரும்பி அங்கே வைத்துக்கொள்ளலாமென்று’ ஆலோசனைக்கிணங்க நாங்கள் மீண்டும் அபாயகரமான பாதையைக் கடந்து அறைக்குத் திரும்பினோம்.நேரம் மாலை ஆறு மணியாகிவிட்டிருந்தது. இன்னொரு அமர்விற்கான பொறுமை தீர்ந்துபோயிருந்தது. பள்ளிக்கூடப் பிள்ளைகளைப் போல அவரவர் திசையில் சிலர் சிதறிப்போயிருந்தபடியால் திட்டமிட்டபடி நேரத்தைக் கையில் வைத்திருக்கமுடியாமல் போனது. யாரும் யாரையும் குறிப்பிட்டுக் குற்றம் சுமத்தவும் முடியாத சூழல். அனாரின் ‘எனக்குக் கவிதை முகம்’தொகுப்புக்கான விமர்சனத்தை சல்மா பிரியதர்சன் வாசிப்பதாக இருந்தது. ஆனால், நேரமின்மை காரணமாக அந்த விமர்சனக் கட்டுரை வாசிக்கப்படவில்லை. அதே நிலைதான் இளம்பிறையின் ‘நீ எழுத மறுக்கும் எனதழகு’தொகுப்புக்கும் நேர்ந்தது. இளம்பிறையின் கவிதைகளை விமர்சிக்க வந்திருந்த கம்பீரனும் கட்டுரையை வாசிக்காமலே திரும்பவேண்டியதாயிற்று. தமிழ்நதியின் (என்னுடையதே) ‘சூரியன் தனித்தலையும் பகல்’தொகுப்பைப்பற்றி விமர்சனக் கட்டுரை வாசிப்பதாகச் சொல்லியிருந்த ‘புது எழுத்து’மனோன்மணி 14ஆம் திகதி காலையாவது வந்துசேர்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. கடைசிவரை அவர் வரவில்லை. தகவலும் தெரிவிக்கவில்லை. அவருடைய ஊரிலிருந்து வந்திருந்த சாஹிப் கிரண் ‘திடீர் உடல்நலக்குறைவால் மனோன்மணி பங்கேற்கவில்லை; ஆனால், கட்டுரையை ஏற்கெனவே எழுதிவைத்திருந்தார்’ என்ற தகவலைத் தெரிவித்தார். தமிழ்க் கவிஞர்கள் இயக்கத்தினால் எதிர்வரும் 26ஆம் திகதி நடத்தப்படவிருக்கும், ஈழத்தமிழ் கவிதைகள் தொடர்பான விமர்சனக்கூட்டத்தில் அந்தக் கட்டுரை வாசிக்கப்படவிருக்கிறது. அதில் கலந்துகொள்ளும் எண்ணம் எனக்கு இல்லை.இறுதியாக அங்கே கூடியிருந்தவர்களிடம் கூட்டம் பற்றிக் கருத்துக் கேட்டபோது, பெரும்பாலானோர் நேரம் சரிவரக் கையாளப்படவில்லை என்ற கருத்தையே தெரிவித்தனர். மற்றபடி அதுவொரு இனிமையான ஒன்றுகூடல்தான். கவிதை தொடர்பாக எனது மண்டைக்குள் புதிதாக ஏதாவது ஏறியிருக்கிறதா என்று தட்டிப்பார்த்தேன்…ம்கூம்… நிறைய நண்பர்கள்தான் தேறியிருந்தார்கள். இருள் படர்ந்த கொண்டை ஊசி வளைவுகளில் பேருந்து வளைந்து நெளிந்து சென்றுகொண்டிருந்தபோது, வெப்பத்தை நோக்கிய பயணம் என்ற எண்ணம் தோன்றி அச்சுறுத்தியது. வாழ்வில் எப்போதாவது பசுமைகளில் நாம் வந்து தங்கிச்செல்லலாம்; ஆனால், தரிக்கமுடியாது. எல்லாவற்றுக்கும் அது பொருந்தத்தான் செய்கிறது

  1. பிற்குறிப்பு: அந்த விமர்சனக் கூட்டத்தைப் பற்றி பலவாறான விமர்சனங்கள் நிலவுவதாக அறிகிறேன். அவரவர் வசதிக்கும் ஆர்வத்துக்கும் விருப்பத்துக்கும் எதிர்பார்ப்புக்கும் புறணி மனோபாவத்திற்கும் ஏற்ப கொஞ்சம் ‘சரக்கு’சேர்த்துப் பெருப்பித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை மட்டுமே இப்போதைக்குச் சொல்லமுடியும்.
    Labels: ,
    posted by தமிழ்நதி
    www.tamilnathy.blogspot.com

    Free counter

Saturday, June 20, 2009

நீ வந்து விட்டாய்


நீ வந்து விட்டாய்


யாவும் பாதியிலேயே

நிறுத்தப்பட்டு விட்டன .


விரும்பிச் சுவைத்துக்கொண்டிருந்த தேநீரொன்று

விருப்பமான தொலைபேசி உரையாடலொன்று

குழந்தையிடமிருந்து பெற்றுக் கொண்டிருந்த முத்தமொன்று

விரும்பிக் கேட்டுக்கொண்டிருந்த பாடலொன்று


நீ வந்து விட்டாய்.


யாவும் ஆறிவிட்டன .

யாவும் துண்டிக்கப்பட்டன .

யாவும் உலர்ந்து விட்டன .

யாவும் நிறுத்தப்பட்டுவிட்டன .


நீ வந்து விட்டாய் .

நான் செய்துகொள்ளவிருந்த

தற்கொலையும் பாதியிலேயே .

(uyirosai)

போகிறேன்




இந்த நாற்காலி ஏற்கனவே அமர்ந்திருக்கிறது


அதன் மடிமேலேறி அமர்கிறேன் .


சாவகாசமாய் தன்னைப் பரப்பிப் படுத்திருக்கும்


மெத்தையின் மேல் குப்புறக் கவுத்துகிறேன் என்னை .


ஓயாது நடந்து கொண்டேயிருக்கும்


சாலையின் மேலேறிப் போகிறேன் .


போகிறேன் ....போய்க்கொண்டேயிருக்கிறேன்


ஒரே சமயத்தில் நேராய் ,தலை கீழாய் ...


இன்னும் எப்படியெல்லாமோ தன்னை இருத்தியிருக்கும்


கல்லை சற்று நகர்த்திப் போட ...


போக ..போக


கல் பெரிய மலையாகிக் கொண்டிருந்தது .

Tuesday, May 19, 2009

நாய்க்குட்டி பொம்மை

-----------------------------
அலமாரியில்

அடுக்கி வைக்கப்பட்ட இடத்திலிருந்து

தன் திசையிலிருந்து மாற்றி மாற்றி

அமர்ந்து கொள்கிறது

அந்த நாய்க்குட்டி பொம்மை .

உணவு மேசையை நோக்கி

உணவு மேசையின் மேலிருக்கும்

வெண்ணையில் தோய்த்துயெடுக்கப்பட்ட

ரொட்டித் துண்டுகளை நோக்கி

மாற்றி மாற்றி அமர்ந்து கொள்கிறது

அந்த நாய்க்குட்டி பொம்மை .

அந்த நாய்க்குட்டி பொம்மையுடன்

விளையாடிக்கொண்டே இருந்துவிட்டு

அப்படியே தூங்கி விட்டது .

குழந்தை

காலையில் எழுந்து பார்த்தேன் .

குழந்தையின் முதுகிற்கு அடியில்

நசுங்கிக் கிடந்தது பொம்மை .

பாவம் இரவெல்லாம் எப்படி அழுததோ .

சிறகுகள் .

--------------
மனதின் சரிவுகளில்

எண்ணிலடங்கா பறவைகள்

நியாபகங்களில் வளர்ந்து நிற்கிறது

பருத்த ஆலமரமொன்று

கண்களில் உப்பு நீர் சுனை .

மனதின் புற வெளியில்

எல்லையில்லா வானம்

எப்போதாவது தூரத்தில்

நீ தெரியும் வேளை

சரிவுகளிலிருந்து வெளிப்பட்டு

பறக்கத் துவங்குகின்றன .

ஆயிரமாயிரம் பறவைகள்

வானம் முழுக்க சிறகுகள் .

உயிரோசை இதழ் -38 (18-05-2009)

Sunday, May 10, 2009

நான்


Friday, April 10, 2009

Monastery

Monastery

Doors of the monastery
are opened
all are meditating
inside monastery
closing their eyes
Every body left
Now
Monastery deeply meditates
closing its broad door eyes.
inba subramanian

Saturday, April 4, 2009

my english poem Death..

Death..
--------
I have seen my death
several times
Don't you need to see
my deathat least once?
Finally take my body
which is dead4563 times already.
inba subramanian

Friday, March 20, 2009

திரு அப்பாஸ் -ANJALI

நண்பர்களே ,
நம்முடைய சக கவிஞரான.திரு அப்பாஸ் அவர்கள் (20-03-09) வெள்ளிகிழமை அன்று உயர் ரெத்த அழுத்தத்தின் காரணமாய் மரணமடைந்தார்.

அவரின் வரைபடம் மீறி , வயலட் நிற பூமி , ஆறாவது பகல் ,முதலில் இறந்தவன் கவிதை தொகுப்புகள் வெளி வந்திருகின்றன

திரு .அப்பாஸின் இறுதி சடங்கு இன்று கோவில்பட்டியில் நடைபெறும .

அவருக்கு மனைவியும், ஒருமகளும் இருக்கிறார்கள்

வருத்தத்துடன்,
இன்பா சுப்ரமணியன்

Thursday, March 12, 2009

லசந்தா விக்ரமதுங்க....





லசந்தா விக்ரமதுங்க....




கடந்த சில நாட்களாய் பேசப்படும் ஒரு பெயர்...தமிழர்கள் மரியாதையுடன் உச்சரிக்கும் பெயர் லசந்தா விகரமதுங்க.... அவர் கொடுரமான முறையில் தான் கொல்லபடுவோம்மென்று உணர்ந்து கடைசியாய் ஒரு 'மரண சாசனத்தை ' எழுதி வைத்துவிட்டு தமிழர்களுக்காய் உயிர் தியாகம் செய்த சிங்கள மாவீரன்.....மஹிந்தா ராஜபக்க்ஷேவின் 25 ஆண்டு கால நண்பர்... 'சண்டே லீடர் 'என்ற நடு நிலை பத்திரிக்கையின் ஆசிரியர்...

ஒவ்வொரு பத்திரிகையாளரும் முன் மாதிரியாக கொள்ளவும்,ஒவ்வொரு தமிழனும் நன்றி சொல்லவும் காரணமான ஒரு அற்புதமான மனிதர்..
தற்கொலை செய்து கொள்ளும் பலர் கடைசி கடிதம் எழுதுவார்கள்... கேட்டிருக்கிறோம்... கொலை செய்யபடுவதை உணர்ந்த அவர் எழுதிய 'மரண சாசனம் ' என்ற அவரின் கடைசி கடிதத்தை அவர் பணி புரிந்த சண்டே லீடர் என்ற பத்திரிக்கை அவர் கொடூரமாக கொல்லப்பட்ட பிறகு வெளியிட்டுள்ளது...

அவர் கொலை செய்யப்பட்டதற்கு முக்கிய காரணம் அவர் சிங்கள அரசின் கபட நாடகத்தை ,ராஜபக்க்ஷேவின் கொடுர முகத்தை உலகத்திற்கு வெளிக்காட்டியது தான்....உலகத்தமிழர்கள் ஒன்று கூடி பலத்த குரலில் 'தமிழினம் அழிவதை தடுத்து நிறுத்துங்கள் ' என்று கதறியபோது யார் காதிலும் விழ வில்லை... இலங்கையில் நடக்கும் அழிவுக்கு எதோ தமிழன் மட்டும் காரணம் போல உலக சமாதான அமைப்புகளும் ( UNO ) மௌனமாய் இருந்தது... இன்று தமிழினம் அளிக்கபடுகிறது, அராஜகம் நடக்கிறது,அதை எழுதும் பத்திரிக்கையாளன் தாக்கபடுகிறான்,அழிக்கப்படுகிறான் , நாடு கடத்தப்படுகிறான், கொடுரமான முறையில் கொல்லபடுகிறான், என்ற பொழுது உலகம் திரும்பி பார்க்கிறது....ஜப்பான் ,ஜெர்மன் போன்ற நாடுகள் குரல் கொடுக்கிறது... செஞ்சிலுவை சங்கம் கூறிய 'மனித உரிமை மீறல் நடக்கிறது ' என்ற வார்த்தைகளை ஒருவழியாக UNO வழிமொழிகிறது...



லசந்தா விக்ரமதுங்க தனது இருதிக்கடிதத்தில் கூறுகிறார் " வன்முறை மட்டுமே நாட்டின் நடப்பாகிபோன பிறகு ,இன்று பத்திரிக்கையாளர்கள் நாளை நீதிமான்கள் அழிக்கபடுவார்கள்.. பிறகு நான் ஏன் இதை செய்கிறேன் ?? நானும் ஒரு கணவன், மூன்று குழந்தைகளின் தந்தை,பத்திரிக்கையோ, அல்லது வக்கில் தொழிலோ செய்யாது, இவளவு ரிஸ்க் எடுப்பது சரிதானா என்று ஆச்சர்யபடுகிறேன்...நண்பர்களோ பாதுகாப்பாக வக்கில் தொழிலை பார்க்கும்படி கூறுகிறார்கள்... அரசியல் நண்பர்களோ, எனக்கு வேண்டிய துறையில் மந்திரி பதவி கொடுப்பதாய் கூறுகிறார்கள்.. எனது நலம் விரும்பிகளோ நான் பாதுகாபற்ற முறையில் பத்திரிகையாளனாய் இருப்பதை விட பாதுகாப்பாய் அவர்கள் நாட்டில் வாழ உதவுவதாய் சொல்கிறார்கள்... என்றாலும் ,புகழ்,பதவி, அலுவலகம் , இதற்கும் மேலாய் எனது மனசாட்சியின் குரலுக்காய் இன்னும் இப்படியே....''என்கிறார் .

பல பிரச்சனைக்கு பின்னரும் ,எப்பேர்பட்ட நிகழ்வாயினும் சரி, உண்மையை ,ஆதாரத்தோடு வெளியிடும் பத்ரிக்கயாகவே இருந்துள்ளது சண்டே லீடர் இதழ்.. .. , மேலும் லசந்தா கூறுகையில் , '' தீவிரவாதம் வேரருக்கபடவேண்டும்.,பிரச்சனைகளை சரித்திர நோகோடு பாருங்கள், தீவிரவாதநோக்கோடு பார்க்காதீர்கள் என்று கூறிவந்தோம்.ஸ்ரீலங்கா ஒரு ஜனநாயக நாடாக வெளிப்படையான ஒரு நாடாக இருக்க வேண்டுமென்றும்,தீவீரவாதத்தை வேரறுக்க அரசாங்கமே தீவீரவாதத்தை கையிலேடுக்ககூடாதென்று கூறினோம்.. ''இலங்கை அரசு மட்டுமே உலகத்தில் தன் மக்கள் மீது குண்டு போடும் நாடு '' என்று நாங்கள் கூறியதற்கு கிடைத்த பட்டம் '' ராஜ துரோகி ''....( Sri Lanka is the only country in the world routinely to bomb its own citizens. ) என்று லசந்தா கூறியுள்ளது உலகத்தை திரும்பி பார்க்க வைக்கும் மிக முக்கியமான ஒரு பதிவாகும்...

லசந்தாவின் வீட்டில் குண்டு மழை பொழிந்தது..குற்றவாளிகளை பிடிதுவிடுவதாய் அரசு பலமுறை உறுதி அளித்தாலும் இன்னுமும் குற்றவாளிகள் பிடிபடவில்லை என்பதே உண்மை என்று கூறும் அவர் உறுதியாக கூறுகிறார் ,'' இறுதியாக நான் கொல்லப்பட்டால் ,அரசு தான் என்னை கொன்றிருக்கும்.''

''மஹிந்தா ,எனது மரணத்திற்கு பின்னர் நீங்கள் வழக்கமான உத்தரவுகளை பிறப்பித்து விசாரிக்க சொல்லக்கூடும் ,என்றாலும் ,முன்னர் பலமுறை நீங்கள் செய்த விசாரணையில் விடயம் எதுவும் வராதது போலவே இப்போதும் வராது..ஆனால், என்னை கொல்லப்போகிரவர்களை எனக்கும் தெரியும் ,உமக்கும் தெரியும்...உம் நலன் கருதி நான் சொல்லவில்லை..'' என்கிறார் .


லசந்தா ,மஹிந்த ராஜபக்க்ஷேவின் 25 வருட கால நண்பர் என்பது பலருக்கு தெரியாது என்றும், மஹிந்தா என்ற முதல் பெயர் சொல்லியும் ,வெகு சிலர் மட்டுமே விளிக்கும் 'ஓயா' (oya ) என்றும் கூப்பிடவும், நண்பர்களோடு இரவு நேரத்தில் மஹிந்தா வின் இல்லத்தில் சந்திக்கும் உரிமை உள்ள இவருக்கே இந்த நிலை என்றால், ஈழத்தில் நடக்கும் விஷயங்களை சொல்ல யார் முன் வருவார்கள்??


சாதாரண உடையில் மோட்டார் சைக்கிள் நாலு மனிதர்கள் வந்து லசந்தாவை கொடூரமாக கொலை செய்தபின் , இலங்கையின் முக்கிய எழுத்தாளர்கள், லங்கதீப பத்திரிக்கையின் உபுல் ஜோசப் பெர்னாண்டோ, ரத்னபாலா கமகே,சண்டே டைம்ஸ் ,இக்பால் அதாஸ், அனுராத லோகப்புரட்சி போன்றோர் வெளிநாடு சென்ற விட்டார்கள்.

உண்மைகளை எழுதுவதற்கும், ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கும் மேலும் பலர் பலியாகலாம் என்கிறார் லசந்தா..கொடூரமாக கொலைசெய்யப்படுவது சுதந்திரத்தின் தோல்வியாகாது என்பது லசந்தவின் கருத்து.. இவ்வளவு இன்னல்களுக்கு நடுவே, கொலை செய்யப்படுவோமென்று தெரிந்தும் ஏன் லசந்தா பத்திரிக்கை துறையில் இருந்தார் என்ற கேள்விக்கு மிக உண்மையான, உன்னதமான பதிலை சொல்லியிருக்கிறார்..
யூதர்களுக்கு எதிராக ஹிட்லர் நடத்திய கொடுமையான தாக்குதல்களை கண்ட மார்டின் முல்லர் எழுதிய கவிதையை தனது பால்யத்தில் படித்த லசந்தா, தனது இறுதி கடிதத்திலும் பதிவு செய்துள்ளார் ..


முதலில் அவர்கள் யூதர்களுக்காய் வந்தார்கள்



நான் பேசவில்லை ,



ஏனெனில் நான் யூதனில்லை.



பின்னர் பொது உடமைவாதிக்காய்,



வந்தார்கள் நான் பேசவில்லை ,



ஏனெனில் நான் பொதுடமைவாதியில்லை



தொழிற்சங்கவாதிக்காய் வந்தார்கள்



நான் பேசவில்லை,



ஏனெனில் நான் தொழிற்சங்கவாதியில்லை



பின்னர் எனக்காய் வந்தார்கள்



எனக்காய் பேச அங்கு எவருமே இல்லை.....


தமிழர்களுக்காய் குரல் கொடுக்க பலர் முன்வந்த போதிலும் சிங்கள அரசின் கொடுமைகளை உலகிற்கு சொன்ன லசாந்தா விக்ரமதுங்கவின் செயல் உலகை திரும்பி பார்க்க வைத்திருப்பது உண்மை.--
UYIRMMAI-FEB '2009 ISSUE

'ஈழ மக்கள் தோழமைக் குரல்' -டில்லி போராட்டம்








Stop the war in Srilanka என்று அச்சிடப்பட்ட கருப்புவண்ண`டி.சர்ட் அணிந்து 'ஈழ மக்கள் தோழமைக் குரல்' அமைப்பினைச் சேர்ந்த தோழர்களின் பயணம் பிப்ரவரி பத்தில் சென்னையில் தொடங்கி டில்லி மண்டி ஹவுஸ் பகுதியை பிப்ரவரி பனிரெண்டில் அடைந்தது. ஒவ்வொருவரின் கைகளும் சென்னை கவின் கலை கல்லுரி மாணவர்கள், ஒவியர்கள் இராப் பகலாய் வரைந்து தந்த நூற்றுக்கணக்கான, போர் நிறுத்தம், ஈழ மக்களின் பாதுகாப்பு, வாழ்வுரிமை, தமிழ் மீனவர்களின் கோரிக்கைகள், அகதிகளின் மாண்புரிமை ஆகிய முழக்கங்கள் அடங்கிய கைப்பதாகைகளை ஏந்தியிருந்தன. மண்டி ஹவுஸ் இருக்கும் பகுதியிலிருந்து ஊர்வலம் புறப்பட்டது. பறை காய்ச்ச தீ மூட்டப்பட்டது. கொழுந்துவிட்டு எரிகின்ற தீயில் காய்ச்சிய பறைகளை புத்தர் கலைக்குழுவினர் அடிக்க, ஊர்வலம் புறப்பட்டது.

ஜந்தர்மந்தர் வரை இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு மேல் நடைபயணம் நடந்தது. பேருந்துகள், மகிழுந்துகள் , தானிகளில் சென்ற பயணிகள் கைப்பதாகைகளைப் படித்துக் கொண்டே சென்றனர். தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் முழக்கங்கள் எழுப்பப் பட்டன. 'போரை நிறுத்து; போரை நிறுத்து ஈழத்தில் நடக்கும் போரை நிறுத்து, இந்திய அரசே போரை நிறுத்து, காந்தி தேசம் கொல்வதா, புத்த தேசம் அழிப்பதா, எங்கள் ரத்தம் ஈழத்தமிழர் ரத்தம், விளம்பர இடைவேளைக்குப் பிறகு தொடங்கும் போர்' என்பது போல பல முழக்கங்கள் டில்லி குளிர்க்காற்றில் கலந்து தேசிய இனங்களின் காதுகளை அறைந்தது.

முன்னால் பறையிசையும் அதற்கு அடுத்து படைப்பாளிகளும், மனித உரிமை ஆர்வலர்களும், மீனவ நண்பர்களும் அதனைத்தொடர்ந்து மாணவர்களும் பேரணியில் அணிவகுத்தனர். டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்களும், உச்ச நீதி மன்ற வழக்கறிஞர்களும், கலைஞர்களும் இந்த பேரணியில் முக்கிய பங்காற்றினர்.

பாராளுமன்றத்தை நெருங்க நெருங்க ஊர்வலத்தில் வந்தவர்களின் உள்ளங்களில் உத்வேகம் கூடிக்கொண்டே இருந்தது. பாராளுமன்ற வீதியை நெருங்க காவலர்கள் உள்ளே போகக்கூடாது என்று தடுக்க ஈழ மக்கள் தோழமைக்குரல் நிறுத்தப்பட்ட இடத்திலேயே ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். சிறிது முன்னேறி மீண்டும் வேறு ஒரு இடத்தில் காவலர்கள் தடுக்க அங்கேயும் சாலையிலேயே அமர்ந்து முழக்கங்கள் எழுப்பினர். டில்லி மற்றும் தேசிய ஊடகவியலாளர்கள் சூழ ஈழத் தமிழ தோழமைக் குரலின் செய்திகளும், கோரிக்கைகளும் நாடெங்கும் சென்று சேர்ந்தது.

பிறகு புத்தர் கலைக்குழுவின் குரலிசைக்கலைஞர் மகிழினி அவர்கள் ஈழம் சார்ந்த துயரங்களை ஒப்பாரிப்பாடலாகப் பாடினார். பறையிசையும் பாடல்களும் பாராளுமன்ற தெருவை வெம்மையாக்கின. சமர்ப்பா குமரன் அவர்கள் பாடிய பாடல்கள் எழுச்சிக்கொள்ள வைத்தன. இதற்கிடையில் ஜே.என்.யு.பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரும் தர்ணாவிற்கான ஏற்பாட்டினையும் ஒலி பெருக்கியும் ஏற்பாடு செய்தனர். 33% இட ஒதுக்கீடு வேண்டி போராட்டம் நடத்தி முடித்த பெண்கள் இயக்கத் தோழர்கள் இந்திய தேசிய மாதர் சம்மேளனத்தின் தேசியச் செயலாளர் தோழர்.ஆனி ராஜா அவர்களின் தலைமையில் ஈழத்தமிழர் மீது நடத்தபடும் போரை நிறுத்தக்கோரி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் உற்சாகமாக பங்கேற்றனர். ஈழப்பிரச்சினை தமிழர் பிரச்சினை மட்டுமல்ல, மானுடத் துயர் என்றும், அந்த துயரைத் துடைக்க தம்மால் ஆனவற்றையெல்லாம் செய்வோம் என ஆதரவு குரல் எழுந்தது. எழுத்தாளர்கள், கவிஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் ஆகியோரின் உரைவீச்சு உணர்வுகளை ஒன்றிணைத்தது. டெல்லி பல்கலைக் கழக மாணவர்கள் முழக்கங்களை இந்தியில் எழுப்ப, பெருங்கூட்டம் திறண்டது.

போராட்டத்தின் இறுதிக்கட்டம் உணர்ச்சிமிக்கதாக அமைந்தது. சமர்ப்பா குமரன் பாடிய 'செவல மாடு கட்டியிருக்கும் சலங்க ஒடியட்டும்; சிங்களவ கொட்டமடிக்கும் இலங்க ஒடியட்டும்' பாடலுக்கு எல்லாரும் இணைந்து ஆட ஆரம்பிக்க வேகம் கூடிக்கொள்கிறது. பல்வேறு இடங்கள்லிருந்த மக்கள் எல்லாரும் அங்கே வந்து ஒருமித்தனர். இந்த நேரத்தில் டில்லி மாணவர் அமைப்பை சார்ந்த ஆதிகேசவன் அவர்கள் இந்தியில் பேசிய இறுதி உரை அனைவரையும் கவர்ந்தது. இலங்கை அரசின் கொடூரம்; இந்திய அரசின் துரோகம், தமிழக அரசியல் கட்சிகள் ஈழப்பிரச்சினையை தேர்தல் சந்தையில் விற்கும் நிலைப்பாடு ஆகியவற்றைக்குறித்து சூடான விவாதங்களோடு ஆர்ப்பாட்டம் முடிந்தது
இந்திய இறையான்மைக்கு விழுந்த பலத்த அடி

ஈழத்தமிழர் தோழமைக் குரல் அமைப்பின் சார்பில் இலங்கையில் நடக்கும் இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்தக் கோரியும் ஈழத்தமிழர் வாழ்வாதாரங்களை உறுதிப்படுத்தக் கோரியும் தலைநகர் டெல்லியில் இரண்டாவது நாளும் போராட்டம் தொடர்ந்தது.ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள பாராளுமன்ற வீதியில் அமைக்கப்பட்டிருந்த உண்ணாவிரதப் பந்தலில் போரை நிறுத்த வலியுறுத்தும் முழக்கங்களுடன் எழுத்தாளர்கள்,மாணவர்கள்,மீனவ அமைப்பினர், டெல்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் தொடர் உண்ணாவிரதத்தில் அமர்ந்தனர். சமர்ப்பா குமரன் புத்தர் கலைக்குழுவோடு இணைந்து எழுச்சிப்பாடல்களைப் பாட பறையிசையும் ஆட்டமும் பந்தலின்முன்பு ஜந்தர் மந்தரில் வெவ்வேறு சமூகப் பிரச்சினைக்ளுக்காக கூடியிருந்த மற்ற மாநிலப் போராளிகளின் கவனத்தை ஈர்த்தது.

உறவுகளை இழந்தவர்கள் தலைமுடி நீக்குவது என்பது தமிழர்களின் மரபுவழிப் பண்பாடு. ஈழத்தில் கொல்லப்பட்ட தமிழர்களின் நினைவாகவும் போரை நிறுத்த வலியுறுத்தியும் மொட்டைப் போடும் போராட்டத்தை நடத்தினார்கள் மாணவர்கள்.பறையும் வாழ்த்தொலியும் வேகமாக எழும்ப சாமுவேல்,ரமேஷ்,டில்லிராஜ்,வினோத்குமார்,மற்றும் எழுத்தாளர் லஷ்மி சரவணக்குமார் ஆகியோர் மொட்டை அடித்து தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினர். இது சுற்றியிருந்த அனைவரையும் வேறொரு தளத்தில் பிரச்சனையின் தீவிரத்தை உணர வைத்தது. அருகே வைகோ உண்ணாவிரதம் இருந்ததால் மதிமுக தொண்டர்கள் வந்து ஈழத்தமிழர் ஆதரவுக் குரல் அமைப்பினர் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றனர்.திடீரென ராஜபக்சேவின் படத்தை அனைவரும் செருப்பால் அடித்தனர்.

பாராளுமன்றக் கூட்டத்தொடர் நடந்துக்கொண்டிருக்கும் இந்த சூழலில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் பற்றி கேள்விப்பட்ட தமிழக மற்றும் பாண்டிச்சேரி பாராளுமன்ற உறுப்பினர்களின் குழு வந்தது. அதில் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன், கிருஷ்ணன், பா.ம.க. உறுப்பினர்கள் கு.ராமதாஸ், ஏ.கே.மூர்த்தி, மோகன், கு.ராமதாஸ் உண்ணாவிரதத்தை வாழ்த்திப் பேசினர். அவர்கள் உரையாற்றும் போது 'எத்தனை முறை கேட்டும் பாராளுமன்றத்தில் ஈழத்தமிழர் பிரச்சனைக்குறித்து பேசுவதற்கு சபாநாயகர் அனுமதி தரவில்லை. நீங்கள் இங்கே வந்து போராடியதன் விளைவுதான் இன்று பேசுவதற்கு எங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. ஈழத்தில் நடக்கும் போரை நிறுத்தச் சொல்லி பாராளுமன்றத்தில் நாங்கள் தொடர்ந்து வற்புறுத்துவோம். அதற்காக எதையும் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்.' என்றார். போராட்டத்திலிருந்த மாணவர்கள் இந்தியா போரை நிறுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பதவிலகவேண்டும் என்று முழக்கம் எழுப்பினார்கள்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான டி.ராஜா போராட்டத்தில் பங்கேற்றுப் பேசினார். ஈழத்தில் மிகவும் கொடுமையான முறையில் தமிழர்கள் தாக்கப்பட்டு வருகின்றனர். 'ஈழத்தில் நடக்கும் போருக்கு இந்திய அரசு ஒருவகையில் காரணமாகவே இருக்கின்றது.

போரை தடுக்க வேண்டிய பொறுப்பு இந்திய அரசுக்கு இருந்தாலும் அதுவே போரை நடத்திக்கொண்டிருப்பதுதான் மிகவும் கொடுமை. இந்திய அரசு போரை நிறுத்தவேண்டும் என்று பாராளுமன்றத்தில் தொடர்ந்து உரக்க குரல் எழுப்புவேன்' என்று உரையாற்றினார். யாழ்ப்பாணப் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்தின் உரையும், கலந்துரையாடலும், ஈழத்தின் அவலத்தை உக்கிரமாக பதிவு செய்து, ஈழ மக்களின் விடுதலைப் போராட்டதை அங்கீகரிக்கும் அவசியத்தை அனைத்து தளங்களிலும் அழுந்த எடுத்துச் செல்லும் உத்வேகத்தை தந்தது.

இச்சூழலில் போராட்டவாதிகளில் ஒரு பிரிவினர் எழுத்தாளர்களில் கவிஞர் லீனா மணிமேகலை, கவிஞர் மாலதி மைத்ரி, கவிஞர் மற்றும் ஊடகவியலாளர் இன்பா சுப்ரமணியன் ,எழுத்தாளர் கோணங்கி, கவிஞர். யவனிகா ஸ்ரீராம், அஜயன் பாலா உள்ளிட்ட குழுவினரும் மாணவர்கள் வெங்கடாசலம்,பிரபாகரன், தர்மேந்திரன் ஆகியோர் கொணட குழுவும் மற்றும் மனித உரிமையாளர்கள் தனம், மஹேஷ், மீனவ இயக்கத் தோழர்கள் லிங்கன், பாரதி என 28 பேர் இலங்கை தூதரகம் முன் சென்று முற்றுகைப் போராட்டமும் ராஜபக்சேவின் கொடும்பாவி எரிப்பும் நடத்த புறப்பட்டனர். தூதரகம் முன் சென்றதும் தாங்கள் கொண்டுவந்த ராஜபக்சேவின் கொடும்பாவியை கொளுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.

இலங்கைத் தூதரகத்தின் வாயிலில் வைக்கப்பட்டிருந்த பெயர்ப்பலகையை மிகுந்த ஆவேசத்துடன் செருப்பால் அடித்தனர். ராஜபக்சேவின் உருவப்படத்தினை மிதித்தும் அதை கொளுத்தியும் முழக்கங்கள் எழுப்பியவாறே இருந்தனர். பெண்கள் I am your sister rape me, I am your mother rape me, Leave our sisters in Eelam என்று எழுதப்பட்ட பதாகைகளை கைகளில் வைத்திருந்தனர். தூதரகத்தினை காவல் காத்த காவலர்கள் துப்பாக்கிகளுடனும் நீண்ட தடிகளுடனும் வந்து சூழ்ந்து நின்றனர். இதனால் அப்பகுதி ஒரு போர்க்களக் காட்சியினை அடைந்தது. இதற்கிடையில் டெல்லி காவல்துறை சம்பவ இடத்திற்கு வந்து போராட்டக்காரர்களைச் சூழ்ந்துக் கொண்டது. திடீரென அனைவரும் 'போர் நிறுத்தம் செய்' என்று கத்தியவாறே அந்த முக்கிய சாலையில் சென்று படுத்து மறித்தனர். போக்குவரத்து தடை ஏற்பட்டது. இதனால் காவல்துறை போக்குவரத்தை வேறு சாலைப் பக்கம் திருப்பியது. தொடர்ந்து சாலையில் அமர்ந்து இலங்கை அரசு ராஜபக்சே ஆகியோருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பிக்கொண்டே இருந்தனர்.
காவல்துறை அவர்களை கைது செய்து சாணக்கியபுரி காவல்நிலையத்தில் வைத்தது.கைது செய்யப்பட வேண்டியது ராஜபக்சேதான் நாங்களல்ல என்று போலீஸ் வாகனத்தில் ஏறிய பிறகும் அவர்கள் முழக்கம் எழுப்பிக்கொண்டிருந்தனர். இரவு ஒன்பது மணிக்குமேல் தீவிர விசாரணைகுப்பின் அவர்கள் விடுதலைச் செய்யப்பட்டனர்.

இது இலங்கை தூதரகம் முன் நடந்துக்கொண்டிருந்த அதே நேரத்தில் ஜந்தர் மந்தரில் நடந்த உண்ணாவிரதமும் அதன் உச்சக்கட்டத்தை அடைந்தது. போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டதைக் கேள்விப்பட்டவுடன் அனைவரும் உரத்து முழக்கம் எழுப்பினர். ஒவ்வொருவரும் உணர்ச்சிப்பிழம்பாகி இருந்தனர். போராட்டத்தை வாழ்த்த பத்திரிகையாளரும் இங்கிலாந்து நாட்டிற்கான இந்திய தூதுவராக பணியாற்றியவரும் தொடர்ந்து மனித உரிமைக்காக எழுதிவருபவருமான குல்தீப் நய்யார் வந்திருந்து பேசினார். சச்சார் அறிக்கையைத் தந்த ராஜேந்திர சச்சார் அவர்கள் போராட்டத்திற்கு வந்திருந்து கலந்துக் கொண்டவர்களை வாழ்த்தியும் போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும் பேசினார். கைது செய்யப்பட்டவர்களை விடுதலைச் செய்யப்படும் வரை அவ்விடத்தைவிட்டு வரமாட்டோம் என்றும் வேண்டுமானால் எங்களையும் கைது செய்யுங்கள் என்றும் உண்ணாவிரதம் இருந்தவர்கள் முழங்கினார்கள்.

அதே நாளில் தன் டில்லி உண்ணாவிரதப் பொதுக் கூட்டத்தில் பேசிய வைகோ அவர்கள், ஈழத் தமிழர் தோழமைக்குரலின் இலங்கை தூதரக முற்றுகை இந்திய இறையான்மைக்கு விழுந்த முதல் அடி என்று குறிப்பிட்டு பேசினார். ஜெனிவாவில் தீக்குளித்த முருகதாசின் தீ தோழர்களின் மனதையும் பற்றி கொந்தளித்ததில் அன்று இரவு சிவந்து இருண்டது.
அறம் நின்று கொல்லும்
மூன்றாவது நாளும் தொடர்ந்த உண்ணாவிரதத்தில், ரிசர்வ் போலீசும் கலந்துக் கொணடது என்று தான் சொல்ல வேண்டும். வலுவான பாதுகாப்பு வளையம். அமைதியான வகையில் நாள் முழுதும் டில்லி தோழர்களும், கலைஞர்களும், மாணவர்களும் வருகை தந்த வண்ணம் இருக்க, போராட்டம் வலுப் பெற்றது. போராட்டங்களில் கலந்துக் கொண்ட ஒவ்வொரு தோழர்களும் தங்கள் கருத்துக்களையும், உணர்வுகளையும், தொடர்ந்து ஆற்ற வேண்டிய பணிகளையும், போராடும் சக்திகளை ஒன்று சேர்க்கும் அவசியத்தையும் பகிர்ந்துக்கொண்டனர். தொடர்ந்து பத்திரிக்கையாள்ர்கள் சந்திப்புகளும் கலந்துரையாடல் போலவே நடைபெற்றது ஊடகங்களின் ஈழம் குறித்த ஊடகங்களின் தவறான புரிதல்களை, முன்முடிவுகளை களைய உதவியது.

ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் மாலை நடைபெற்ற பேரணியும், கலை நிகழச்சிகளும், கலந்துரையாடலும், பேரெழுச்சியாய் நடைபெற்றது.இந்திய ஏகாதிபத்தியத்தின் நாடி பிடித்து உலுக்கும் வேளை வந்துவிட்டது என்பதே கூடியிருந்த அத்தனை பேரின் உணர்வொருமையாக இருந்தது. ஈழம் குறித்த தேசிய இனங்களின் கொலைகார மெளனத்தை கலைக்கும் பணியை இனி மாணவர்களும், அறிவு சமுதாயமும் மூர்க்கமாக செய்யத் தொடங்கவில்லையென்றால், இனப்படுகொலைக்கும் பார்த்துக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் பொறுப்பாகி விடுவோம் என்ற உண்மையை உடைத்து தொடங்கிய விவாதங்களின் ஆவேசம் அறத்தின் மடையைத் திறந்தது. நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த ஜவஹர்லால் நேரு பல்கலைகழக மாணவர்கள் முத்துக்குமாருக்கும், உயிர் நீத்த மற்ற நண்பர்களுக்கும் தமிழிலேயே வீரவணக்கம் செய்து முழங்கியது, ஈழ விடுதலையின் குரலை மானுடத்தின் மனசாட்சியாக ஒலித்துக் காட்டியது

Thursday, March 5, 2009

யுத்ததிற்கு பின்



யுத்ததிற்கு பின்


-------------------


மருத்துவமனையில்


என் கால்களை வேறொருவன்


கையில் ஏந்தி வந்தான்


இந்தா...


பொருத்திக்கொள் என்றான்.


முன்பிருந்த கால்களைவிட


அது வேறு நிறமானது ...


வலிமையானது...


இரத்த நாளமற்றது..


தவிர தேவையற்ற பொழுதுகளில்


தனியே கழட்டி வைக்கவும் ஏதுவானது .
படுக்கை அறையில்


வாசிக்கும் பொழுதும்


தேநீர் அருந்தும் பொழுதும்


துயிலும் பொழுதும்


சுவரில் சாய்ந்தபடி


என் கால்கள் என்னை வேடிக்கைப்பார்கின்றன ..
குளியல் அறையில்


வினோதமான குளியல்


குளியலறைக்கு உள்ளே தாளிட்டு நானும்


வெளியே என் கால்களுமிருக்கின்றன.


.மிதியடிகள்


தேவையற்ற ஒன்றாகி விட்டது.
ஒருமுறை எண்ணைக்கான வந்த


என் நண்பன் ச்ரித்தபடியே சொன்னான்


உண் வாழ்வை விட


உன் மரணமொரு வினோத நிகழ்வாயிருக்கும்


விட்டதில் சுருக்கிட்டு


நீ தற்கொலை செய்துகொள்வாய் எனில்


அந்தரத்தில் உன் உடல் மட்டும் தொங்கியபடியும்


தரையில் உன் கால்கள் பதிந்தபடியும்


நீ இறந்து கிடப்பாய்.


நோய் வாய்த்து நீ மரணித்துவிட்டால்


உன் உடலை எரித்தோ ,புதைத்தோ


விட்டு வந்தாலும்


வீட்டில் உன் கால்கள் மட்டும் சுவரில் சாய்ந்தபடி


தனித்திருக்கும்


மிஞ்சியிருக்கும்


உன்னை நியாபகமூடியபடியே ........

சுவை..


சுவை..

எல்லோரும் இனிப்பை சுவைத்தோம்

எல்லோரும் கசப்பை சுவைத்தோம்

எல்லோரும் உவர்பை சுவைத்தோம்

இவையாவற்றையும் சுவைக்காத

ஒரு கணத்தில் சுவையற்ற

சுவையொன்றை சுவைதுக்கொண்டிருந்தோம்

தத்தம் நாக்கில் ...

நெடிய சுவர்..


நெடிய சுவர்..

நீயொரு செங்கல்

நானொரு செங்கலென

மாற்றி மாற்றி அடுக்கி வைத்து

எழுபியாயிற்று நம்மிருவருக்குமிடையே

நெடிய சுவரொன்றை.

சமரசம் செய்ய முயன்றவர்கள் முன்னிலையில்

ஒப்புதல் அளித்துவிட்டோம்

சுவரற்ற வாழ்வை வாழ்வதாய்..

ஆனால் முதலில் நீக்க வேண்டும்

உன் முதல் செங்கலை.

ஏவாள் ஒ ஏவாள்..



ஏவாள் ஒ ஏவாள்..


( தஸ்லிமா நஸ்ரின் )


ஏவாள் ஏன் அந்த கனியை புசித்திருக்ககூடாது?


அக்கனியை எட்ட அவளுக்கு கைகளில்லையா?


பரிப்பதற்க்குதான் விரல்களில்லையா?


பசியை உணர ஏவாளுக்கு வயிறுதானில்லையா?


தாகத்தை உணர நாக்கோ


காதலை உணர இதயமோயில்லையா?


நல்லது...பிறகு ஏன் ஏவாள் அந்தகனியை உண்ணகூடாது?


ஏன் அவளது ஆசைகளை புதைத்து வைக்க வேண்டும்?


பாத அடிகளை ஒழுங்கு படுத்தி தாகத்தை மட்டுப்படுத்த வேண்டும்?


ஏடன் தோட்டத்தில் ஆதாமுடன் இணைந்து உலாவ வேண்டுமென


ஏவாள் கட்டாயப்படுத்த பட்டிருக்க வேண்டும்?


ஏவாள் கனியை உண்டதனால்


நிலவு ,சூரியன்,நதி,கடல் உள்ளது.


மரங்களும்,செடிகளும் ஓயினும்கூட


கனியை உண்டதனாலேயே உள்ளது..


ஏவாள் கனியை உண்டதினால்


சந்தோசம் ,மகிழ்ச்சி,ஆனந்தம் ..


கனியை தின்று ஏவாள் சொர்கத்தை பூமியில் உருவாக்கினாள்...


ஏவாளே, மேலும் ஒரு கனி கிடைத்தால்


புசிப்பதை எப்போதும் நிறுத்தி விடாதே.


மொழிபெயர்ப்பு :இன்பா சுப்ரமனியன்


உயிரோசை.

post scrap cancel

Saturday, January 31, 2009

கண்டன கவிதைப்போராட்டம்

karthik J December 21, 2008 10:12 PM PST நன்றி
ஊடறு இக்குறிப்பை ஊடறுவில் பிரசுரித்தமைக்கு. புலம்பெயர் நாட்டில் தான் மிகக் கேவலமாக பெண்கள் சந்திப்பு போன்றவற்றை விமர்சித்து கொச்சைப்டுத்துகிறார்கள் சில புறம்போக்குகள் என்றால் இக்கண்டன கவிதைப்போராட்டத்தையும் சிலர் கொச்சையாக விமர்சிக்கத் தொடங்கிவிட்டார்கள் இவர்களுக்கு வேற வேலையே இல்லை இவர்களால் ஒரு ம--- ?? புடுங்கத்தெரியாது ஆனால் (இந்த வார்த்தையை பாவிப்பதற்கு மன்னிக்கவும் ஊடறு) யாராவது முன்னின்று செய்தால் அதற்கு புடுங்கத் தொடங்கி விடுவார்கள். பெரியாரைப் பற்றி பதிவு போடும் பெண்கள் என்று சொல்லக்கொள்ளும் சில பேமாளிகள் உட்பட இவர்களால் ஒன்றுமே செய்ய முடியாது அது தான் இவர்களின் பலவீனம் நீங்கள் மௌனமாக இருந்து உங்கள் வேலைகளை பாருங்கள். அது தான் இன்றைக்கு தேவையான விடயம் இந்தக் கண்டனக்கவிதைக்கூட்டத்திற்கு நானும் போயிருந்தேன். மிகவும் அற்புதமாக இருந்தது. இப்பொழுது இந்தப்பதிவை பார்க்கும் போது சந்தோசமாக இருக்கிறது. வாழ்க பெண்கள் தொடர்ந்து ஈழத்தமிழருக்காக குரல் கொடுக்க என் போன்றவர்கள் உள்ளனர். என்பதை கூறிக்கொள்ள விரும்புகிறேன். கார்த்திக்
திருவண்ணாமலை

Thursday, January 22, 2009

அ-கடிதங்கள்


அ-கடிதங்கள்

-----------------

இலக்கமற்ற வீட்டிற்கு

நிறையகடிதங்கள்வந்துசேர்கின்றன.

காகிதமற்று,உறைகளற்று,

எழுத்துகளற்று,வார்த்தைகளற்ற

அ- கடிதங்களை

உருவமற்ற ஒருவன் / ள்

வாசிக்கிறான் / ள்.

பின்னவற்றை வேலைப்பாடு மிகுந்த

காற்றில் பின்னப்பட்ட பையொன்றில்

சேகரித்தபடி இருக்கிறான் / ள்

காலத்திற்கும் .

puthiyaparvai -dec2008

மரமற்ற இடமேது ?


மரமற்ற இடமேது ?

-------------------------

கிளையற்ற மரமொன்றை கண்டேன்

மரமற்று ,கனியற்று இருந்தது

விதையற்று வளர்ந்திருந்தது அம்மரம் .

வளர்வது மட்டும் இயல்பென்று .

வளர்வதெல்லாம் மரமென்றால்

மனமும் மரமன்றோ ?

வளராத ஏதோவொன்று சொல் ?

வளர்வதெல்லாம் மரமென்றால் மரமற்ற இடமேது ?
puthiyaparvai -dec 2008

Saturday, January 3, 2009

அ-கவிதை


அ-கவிதை

--------------

மேல்,கீழுமற்ற உலகில்

இறந்த ,நிகழ், வருங்காலமற்ற
ஒரு நாளில் பிறந்தேன்.

இருள்,வெளிச்சம் இரண்டுமற்ற பொழுதில்

கவிதையொன்றை எழுதி வைத்தேன்.

துக்கமும், சந்தோசமுமற்ற வாழ்நிலைப்பற்றி

அது இருக்கட்டும் அதை நீங்கள்

எந்த காலத்தில் அமர்ந்து

வாசித்தீர்கள்,

வாசித்துக் கொன்டிருக்கிறீர்கள்,

வாசிப்பீர்கள்

pithiaparvai - jan2009 issue